இந்தியாவில் பிறந்திருந்தாலும் சிங்கப்பூரில் வளர்ந்த தமிழனான எனக்கு, அயலகத் தமிழர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சியளித்தது.
இந்நிகழ்ச்சியின் வழி, சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் தமிழின் தரம், நிலை, முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்.
மற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையில் தமிழ்மொழியின் பயன்பாட்டைப் பற்றியும் கற்றறிந்தது என் மனதை நெகிழவைத்தது.
இவ்வுரையாடல்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மேடையில் பல்வேறு அற்புதப் பேச்சுகளைச் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். தமிழ்மொழி பற்றி நான் மேலும் ஆழமாக அறிந்திட அவை பெரிதும் உதவின.
இவ்வாறு நடந்தேறிய பேச்சுகளில் என் மனதில் நின்றது, கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சாகும். முன்னாள் சிங்கப்பூர் அதிபர், அமரர் திரு எஸ். ஆர். நாதன் அவர்களுடனான தனது சந்திப்பை விவரித்தது சுவாரசியமாக இருந்தது.
மேலும், அயல்நாட்டு தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க இத்தகைய நிகழ்ச்சிகள் எவ்வாறு உதவுகின்றன என்று விளக்கியதும் அற்புதமாக இருந்தது.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக நமது சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அவர்களைச் சந்தி்த்து உரையாடியதும் எனக்குப் புதுவித அனுபவமாக இருந்தது.
சிங்கையில் இரண்டாம் தலைமுறை அயல்நாட்டு தமிழர்களாக வாழும் எங்களுக்கிருக்கும் சந்தேகங்கள், உரிமைகள், வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி நானும் என்னுடன் இருந்த மற்ற சிங்கப்பூர் இளையர்களும் திரு சண்முகத்திடம் கேள்விகள் எழுப்பினோம். அக்கேள்விகளுக்கு அவரும் பொறுமையாகப் பதிலளித்தார்.
இவற்றுடன் சிங்கப்பூரில் எளிதாகக் காண முடியாத கலைநிகழ்ச்சிகள், பொருட்காட்சியகம் போன்றவை கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்தன.
இத்தகைய நிகழ்ச்சிகள் தமிழர் என்ற நம் அடையாளத்தை மேலும் ஆழ வலியுறுத்துவதோடு தமிழ் மொழியை வளர்ப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இளையர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளுக்குச் சென்று, தமிழின் அருமையை உணர்ந்திட வேண்டும் என விரும்புகிறேன்.
- யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல், தெற்காசிய படிப்புகள் துறையில் பயிலும் மாணவர். அவர் தமிழ் முரசு நாளிதழின் கல்விமானும் ஆவார். தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவையின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.