சுயமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதவியுடன் தங்கம், பங்குச்சந்தை, அந்நியச் செலாவணி விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்கும் பணியில் இரு இளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அளவறி நிதித்துறை (Quantitative Finance) என்று கணித உலகில் பிரபலமாகிவரும் ஒரு புதிய துறையில் இவர்களது ஆய்வு அடங்கும்.
பொதுவாக, பங்குச்சந்தை விலைகள் ஏறுமா இறங்குமா என்பதை நிதித்துறை ஆய்வாளர்கள் உலக நடப்புகள்மூலம் ஊகிப்பர்.
ஆனால், உலக நடப்புகளைக் கருதாமல் கணித ரீதியாகவும் பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை ஊகிக்க முடியும் என்பதைக் காட்டினார் 1980களில் இத்துறையை தோற்றுவித்த ஜிம் சைமன்ஸ்.
தேசிய சேவையின்போது தாமாக அந்நியச் செலாவணி சந்தையைக் கண்காணித்து, அதில் முதலீடு செய்துகொண்டிருந்தார் குமரவேல் விக்னேஷ், 24.
“இதைத் தானியங்கியாக, கணினிவழி ஏன் செய்யக்கூடாது?” என்ற கேள்வி எழுப்பினார் இவருடைய தோழர் ரோஹன் வீரா, 26.
அப்போதுதான் தொடங்கியது ‘ஸ்கைப்லூ கேபிட்டல்’ என்ற சுயதொழில்முனைவு. சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழகத்தில் விக்னேஷ் கற்ற கணினி நிரலாக்கம், புள்ளியியல் படிப்பு அவருக்குக் கைகொடுத்தது.
பொதுவாக, செயற்கை நுண்ணறிவு நிரல்களைக் கொண்டே பங்குச்சந்தை நிலவரத்தை ஊகிப்பது சாத்தியம் என எண்ணப்படும் நிலையில், பள்ளியில் கற்ற ஒருசில கணித உத்திகளைப் பயன்படுத்தி பங்குச்சந்தை விலைகளை ஊகிக்கும் பெரும் சவாலைத் தைரியமாக ஏற்றார் விக்னேஷ்.
அந்நியச் செலாவணி மட்டுமன்றி பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி, எண்ணெய், பண்டங்கள் போன்ற அனைத்துச் சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்தையும் கணிக்கும் மென்பொருளை விக்னேஷ் உருவாக்கினார்.
தனது மென்பொருள், ஒரு நொடியில் இரண்டு மில்லியன் கணிப்புகளைச் செய்யும் என்கிறார் இவர்.
மென்பொருள் மேம்பட்டு இந்நிலையை எட்ட, ரோஹன் அனுபவ ரீதியாக வழங்கிய ஆலோசனைகளும் பெரும் பங்காற்றின. மென்பொருள் நிறுவனத்தைப் பற்றிப் பிறருக்குத் தெரியப்படுத்தி புதிய இணைப்புகளை ஏற்படுத்துவதோடு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுள்ளார் ரோஹன்.
அடுத்தபடியாக ஒரு பரஸ்பர நிதியை (மியூச்சுவல் ஃபண்ட்) தோற்றுவிக்க இவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவும் இவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் பின்னர், சாதாரண சிங்கப்பூரர்களும் இந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம் என்கின்றனர் இவர்கள்.
‘ஸ்கைப்லூ கேபிட்டல்’ நடத்திவரும் இந்த ஆய்வுகளைத் தற்போது அயல்நாட்டு இடர்காப்பு நிதிகள் (ஹெட்ஜ் ஃபண்ட்) கண்காணித்தும் ஆதரித்தும் வருகின்றன.
தற்போது துருக்கி, மெக்சிகோ, கென்யா போன்ற நாடுகளில் கணினியியல் பயிலும் மாணவர்களும் ‘ஸ்கைப்லூ கேபிட்டல்’ நிறுவனத்துக்கு இணையவழி வேலை செய்து வருகின்றனர்.
“இளையர்கள் புதியனவற்றை முயலவேண்டும். தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்ற மனத்திடத்தை வளர்த்தால் பலவற்றைக் கற்று வெற்றிகாணலாம்,” என்கின்றனர் இவ்விருவரும்.