இளையர்களுக்காக செப்டம்பர் 16ஆம் தேதியன்று, 74 சர்குலர் சாலையில் இருக்கும் ப்ரீதிவ் குத்துச்சண்டை சங்கத்தின் (பிபிசி) ஒன்பது குத்துச்சண்டை போட்டிகள் மாலையிலும் இரவிலும் நடைபெற்றன.
தற்போதைய உலகக் குத்துச்சண்டை மன்ற ஆசிய குத்துச்சண்டை வெற்றியாளர் ப்ரீதிவ் ராஜ், 25, தலைமையில் இயங்கும் ‘பிபிசி’, ஐந்து ஆறு வாரங்களுக்கு ஒருமுறை இப்போட்டிகளை நடத்துகிறது.
சிங்கப்பூரின் பற்பல குத்துச்சண்டை சங்கங்களிலிருந்தும் அனுபவம் குறைந்த, அல்லது மிகுந்த குத்துச்சண்டை வீரர்கள் இவற்றில் கலந்துகொண்டனர்.
பங்குகொண்ட தேசிய குத்துச்சண்டை வீரர்
சென்ற மாதம் நடைபெற்ற சராவாக் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தங்கப் பதக்கம் வென்ற ஆதி பிரனவ் வி, 18, இப்போட்டியிலும் வாகை சூடினார்.
டிசம்பர் 2021ல்தான் குத்துச்சண்டை போடத் தொடங்கிய இவரது அபார வளர்ச்சி வியக்கத்தக்கது. சென்ற ஜூலை மாதம் தேசிய இளையர் குத்துச்சண்டை அணியில் சேர்ந்த இவர், ஜனவரி 2023ல் தன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தற்போது வளர்ச்சிநிலை விளையாட்டாளராகக் கருதப்படும் இவர், அடுத்த ஜனவரி முதல் சிறப்பு (எலிட்) நிலைக்கு முன்னேறுவார்.
குத்துச்சண்டையோடு ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஒலிப் பொறியியல் துறையில் படித்தும் வருகிறார். பள்ளி வகுப்பு தொடங்குவதற்கு முன்பும் முடிந்த பின்பும், வாரத்தில் மொத்தம் ஆறு நாள்களுக்குக் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
தென்கிழக்காசிய போட்டிகளில் வெற்றிபெறுவதே இவரது முக்கியக் குறிக்கோளாகும்.
“குத்துச்சண்டையில் உழைத்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். தொடர்ந்து முயற்சிப்பேன்,” என்கிறார் பிரனவ்.
ஆதரவளித்த தேசிய குத்துச்சண்டை வீரர்கள்
‘பிபிசி’யில் பயிற்றுவிப்பாளராக இருக்கும் பிரதீப் கிருஷ்ணன், 24, சராவாக்கில் சிங்கப்பூருக்காகத் தங்கப் பதக்கம் வென்றவர். அதே சமயம், லண்டன் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலும் படித்துவருகிறார்.
ஷாகுர், 27, தவறான நட்பினால் சிறார் இல்லத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. குத்துச்சண்டையினால் அவர் வாழ்வே மறுமலர்ச்சி அடைந்தது. சரவாக்கில் சிங்கப்பூருக்காக வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
“குத்துச்சண்டைக்குப் புதியவராக இருந்தால்கூட, துணிச்சலுடன் செய்து பாருங்கள்,” என இருவரும் ஊக்குவிக்கின்றனர்.
போட்டியின் மையச் சண்டை
போட்டியின் மையச் சண்டையாக ‘பிரதர்ஸ் பாக்ஸிங் அகாடமி’ (பிபிஏ)வின் தாரிக், ‘லெஜண்ட்ஸ்’ஸின் அபாஸ் சண்டையிட்டனர். கடுமையான போட்டிக்குப் பின் அபாஸ் வாகை சூடினார்.
24 வயது தாரிக் அஸீஸ், 2014 முதல் 2016 வரை குத்துச்சண்டையில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார். 13 ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறார்.
அண்மைய சிங்கப்பூர் தேசிய நிலைப் போட்டியில் ‘60 கிலோ’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதால் பல வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
அக்டோபர் 7 நடக்கவிருக்கும் குத்துச்சண்டைப் போட்டிக்காக தற்போது தீவிரமாகப் பயிற்சிபெற்று வருகிறார்.
இவர் 12 வயதாக இருக்கையில் முன்னாள் தேசிய பயிற்றுவிப்பாளார் பாலா, இவரைக் குத்துச்சண்டைக்கு அறிமுகப்படுத்தி பெரிதும் ஊக்குவித்தார். திரு பாலா சென்ற ஆண்டு புற்றுநோயினால் மறைந்தார்.
“கடந்த 4 ஆண்டுகளாக வாரத்திற்கு ஐந்துமுறை ‘பிபிஏ’வில் பயிற்சிபெற்று வருகிறேன். அவர்களின் நல்ல திட்டங்கள்வழி விரைவாக முன்னேறிவருகிறேன்.”
“முன்பு ஓராண்டில் இரு போட்டிகள்தான் நடக்கும். ‘பிபிசி’ ஏற்பாடு செய்துள்ள இதுபோன்ற போட்டிகளால் பலருக்கும் நல்ல அனுபவம் கிடைக்கிறது.
சிங்கப்பூர்க் குத்துச்சண்டை ஒரு நல்ல திசையை நோக்கிச் செல்கிறது,” என்கிறார் தாரிக்.
புதிதாகவும் தொடங்கலாம்
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் குத்துச்சண்டையிடத் தொடங்கிய ரோஹன் ஷாஜி, 18, கலந்துகொண்ட முதல் குத்துச்சண்டைப் போட்டி இதுதான். அதில் வென்று சாதித்துக் காட்டினார்.
“குத்துச்சண்டையை நல்ல பொழுதுபோக்காகக் கருதுகிறேன்,” என்கிறார்.
பெண் குத்துச்சண்டை வீராங்கனை
சென்ற அக்டோபரிலிருந்து ‘பிபிசி’யில் பயின்ற நீனா நடராஜன், 29, “மேலும் பல பெண்கள் குத்துச்சண்டையில் ஈடுபட ஊக்குவிக்கிறேன். மனதுக்கும் நல்லது, உடலுக்கும் நல்லது,” என்கிறார்.
‘பிபிசி‘ ஏற்பாடு செய்யும் அடுத்த குத்துச்சண்டை போட்டி அக்டோபர் 21 நடைபெறும்.