செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் கற்றல், கற்பித்தல் முறைகளை புதுமைப்படுத்தலாம் என்பதை புத்தாக்க இந்தியக் கலையகம் செப்டம்பர் 5 முதல் 7ஆம் தேதிவரை நடத்திய ‘செயற்கை நுண்ணறிவு உலகில் செந்தமிழ்’ பயிலரங்கு மெய்ப்பித்தது. செப்டம்பர் 8ஆம் தேதி படைப்புப் போட்டியும் நடந்தது.
திரு குணசேகரன், திரு அலி, திரு ராஜேஷ் ஆகியோர் மூன்று நாள்கள் மாணவர்களுக்கு பலவித புத்தாக்கச் செயலிகள், இணையத்தள திட்டங்களைக் கற்றுத் தந்தனர்.
20 மாணவர்களின் அறிவார்ந்த பகிர்வுகளுக்குச் செவிசாய்த்து, முன்னாள் மூத்த ஒலிபரப்பாளர்-இன்னாள் தமிழாசிரியர் திருமதி மீனாட்சி சபாபதி, ‘இயோன் ரியாலிட்டி’ (EON Reality) நிறுவனத்தில் பணியாற்றும் திரு செந்தில்குமார் நீதிபதிகளாக செயல்பட்டனர்.
‘டி-ஐடி’ (d-id.com) தளம் மூலம் பாரதி, ஒளவையார், திருவள்ளுவர் என தமிழ்ப் புலவர்களுக்கு மாணவர்கள் உயிர்கொடுத்தனர்.
தட்டச்சு செய்ததைப் பேசச் செய்து பார்வையாளர்களுடன் உயிரோவியம் உரையாடும் வகையில் படைத்தனர்.
‘ஐடியோகிராம்’ (ideogram.ai), ‘கிரையான்’ (craiyon.com) போன்று எழுத்தைப் புகைப்படங்களாக மாற்றும் இணையத்தளங்களின் மூலம் தமிழ்ப் பண்டிகைகளின் சிறப்புகளை மாணவர்கள் கண்கவர் வண்ணத்தில் சித்திரித்தனர்.
360 முப்பரிமாணக் காட்சிகளை உருவாக்குவதற்கு ‘புளோக்கேட் லேப்ஸ்’ (blockadelabs.com) தளத்தையும் பயன்படுத்தினர்.
‘இயோன்-எக்ஸ்ஆர்’ (core.eon-xr.com) மற்றும் மெய்நிகர் செயலிகளைக் கொண்டு தமிழ்க் கலாசாரம் சார்ந்த மெய்நிகர்க் காட்சிகளையும் உருவாக்கினர்.
‘பீட்டோவன்’ (beatoven.ai) தளம் மூலம் வெவ்வேறு இந்திய பாணிகளிலும் உணர்ச்சிகளிலும் இசையமைத்தனர்.
குரல் அடையாளத்தையும் மெய்நிகர் வடிவத்தையும் இணைத்து தமிழ்ப் பாடப் புத்தகப் பயிற்சிகளுக்கான மறுவடிவமைப்புத் திட்டம் (VR) 2ஐ பரிந்துரைத்த பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவி முருகேசன் தர்ஷினி, 16, முதல் பரிசு பெற்றார்.
குண்டலகேசியைப் பேசச் செய்து, தமிழ்க் காப்பியங்களை மாணவர்களுக்கு சுவாரசியமாக வழங்க முடியும் என்று படைத்த பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திசுவரன், 15 இரண்டாம் பரிசைப் பெற்றார்.
ஏற்பாட்டாளர் சி. குணசேகரன், புகழ்பெற்ற உள்ளூர்ப் பாடகர்கள் சுவப்னாஶ்ரீ ஆனந்த், ராஜா சுவாமிநாதன் மற்றும் மாணவர்கள் தமிழ்ப் பாடல்களை செயற்கை நுண்ணறிவு இசைக் கருவிவழி பாடும் முறையையும் மேடையில் நேரடியாக படைத்தனர்.
“இம்மூன்று நாள் படைப்பில் எழுத்தைப் பேச்சாக மாற்ற முடியும் என கற்றுக்கொண்டேன். வருங்காலத்தில் இது என் பள்ளிப் படைப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் ஆறுதல் பரிசை வென்ற ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி மாணவி ரிட்டி பியோனா, 15.
சிறப்பாகக் கலந்துகொண்டதால் மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
மின்னாக்கம்வழி எதிர்காலத் தமிழ் இளைய படைப்பாளிகளை அடையாளம் காணும் அரிய வாய்ப்பு கிடைத்ததாகப் பெருமிதத்துடன் கூறினார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சி. குணசேகரன்.