வாஷிங்டன்: அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனுக்கு புதிய ராணுவ உதவியாக எட்டு பில்லியன் டாலர் நிதியை ஏப்ரல் 26ஆம் தேதி அறிவித்துள்ளார்.
உக்ரேனுக்கான உதவிகள் பல மாதங்கள் தாமதமான நிலையில் அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யா முன்னேறி வருவதைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறும் உக்ரேனுக்கு புதிய நிதியுதவி வழங்கும் தாமதமான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட பிறகு இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
“உக்ரேனுக்கு கூடுதல் கடப்பாட்டுடன் ஆறு பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு ஆஸ்டின் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக உக்ரேனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் அமெரிக்கா கலந்துரையாடியது.
“இன்று வரை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ள ஆகப்பெரிய பாதுகாப்பு உதவி நிதி இது. இதில் ஆகாயத் தாக்குதலை முறியடிக்கும் சாதனங்கள், வானூர்திகளைத் தடுக்கும் ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ உதவிகள் உள்ளடங்கியிருக்கின்றன,” என்றும் திரு ஆஸ்டின் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர் நிதியுதவியில் அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள ஆயுதங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் அண்மைய உதவி, அமெரிக்காவின் தற்காப்புத் தொழிற்சாலைகளிலிருந்து ராணுவ ஆயுதங்கள் வழங்கப்படும். இதனால் போர்க் களத்தை ஆயுதங்கள் சென்றடைவதற்குத் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.
உக்ரேனுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரேனுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளுக்கு அமெரிக்கா கடப்பாடு தெரிவித்துள்ளது.
இவ்வாரத்திற்கு முன்பு, இவ்வாண்டு மற்றொரு நிலவரத்தில் உக்ரேனுக்கு புதிய உதவியை வாஷிங்டன் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட US$300 மில்லியன் தொகுப்பு, அமெரிக்க தற்காப்பு அமைச்சு பொருள்களை வாங்குவதில் சேமித்த பணத்திலிருந்து மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.