கெய்ரோ: போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அண்மையில் முன்வைத்துள்ள உத்தேச திட்டத்துக்கு இஸ்ரேல் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளது.
இதனை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஏப்ரல் 27ஆம் தேதி ஹமாஸ் தெரிவித்தது.
“ஏப்ரல் 13ஆம் தேதி நடுவர்களாகச் செயல்படும் எகிப்திய, கத்தார் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட உத்தேச திட்டத்திற்கு இஸ்ரேலிடமிருந்து பதில் கிடைத்துள்ளது,” என்று தற்போது கத்தாரில் உள்ள ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான கலில் அல்-ஹாயா அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
காஸாவுக்குள் புகுந்துள்ள இஸ்ரேலுடன் கடந்த ஆறு மாதங்களாக ஹமாஸ் போரிட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட போர் நிறுத்த முயற்சிகளில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
ஹமாஸ் தனது கோரிக்கைகளை விட்டுக்கொடுப்பதாக இல்லை. போருக்கு முடிவு கட்டும் எந்தவொரு ஒப்பந்தமும் தனது கோரிக்கைகளை நிறைவேற்றும்விதமாக இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி இஸ்ரேலுக்குச் சென்று எகிப்திய பேராளர்கள் பேச்சு நடத்தியுள்ளனர். இது, போரை நிறுத்தப் பேச்சு மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று இஸ்ரேல்-எகிப்திய பேராளர்கள் சந்திப்பு குறித்து விவரமறிந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
“போர் நிறுத்தத்தை பரிசீலிக்க இஸ்ரேலிடம் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் முன்பு விவாதிக்கப்பட்ட 40 பிணைக் கைதிகளுக்குப் பதிலாக 33 பேரை ஹமாஸ் விடுவிப்பதற்கு வரம்புக்குட்பட்ட போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பரிசீலித்து வருகிறது,” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு முடிவு கட்டும் வகையில் ஹமாஸ் தனது வசமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இதர 17 நாடுகளும் ஏப்ரல் 25ஆம் தேதி கேட்டுக் கொண்டன.
ஆனால் ஹமாஸ் அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று கூறிவிட்டது.
அதே சமயத்தில் அது ஏப்ரல் 26 அன்று வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் மக்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும் எந்தவொரு யோசனைகளுக்கும் அல்லது திட்டங்களுக்கும் கதவு திறந்திருக்கும்” என்று தெரிவித்தது.