பாக்தாத்: ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளின் (பிஎம்எஃப்) முகாம் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஈராக்கியத் தலைநகர் பாக்தாத்துக்குத் தென்திசையில் (ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தூரம்) உள்ள கால்சோ ராணுவ முகாமில் பெரும் வெடிப்பு ஏற்பட்டது.
இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் மாண்டார்; அறுவர் காயமடைந்தனர்.
“வெடிப்பு காரணமாகப் பொருட்சேதத்துடன் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. சிலர் காயமடைந்தனர்,” என்று பிஎம்எஃப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகப் பாதுகாப்புப் படை கூறியது.
தாக்குதலுக்கு காரணமானோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.