துபாய்: இஸ்ரேலின் எந்த வகையான தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செங்கடலைக் கடந்துசெல்ல ஈரான் கடற்படை உதவிவருவதாக ஈரானின் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
ஏப்ரல் 1ஆம் தேதி டமாஸ்கசில் தனது துணைத் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறுகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த வார இறுதியில் இஸ்ரேல்மீது ஏவுகணை, ஆளில்லா விமானம் போன்றவற்றால் முதல்முறையாக ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் ஈரானை எச்சரித்தது.
இதுகுறித்து ஆலோசிக்க இஸ்ரேலின் போர்க் குழு புதன்கிழமை கூடியது. அப்போது தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
“எங்கள் மண்ணில் இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி புதன்கிழமை கூறினார்.
அந்நாட்டின் ராணுவ தினத்திற்கான அணிவகுப்பில் கலந்துகொண்ட அவர், அந்நாட்டு ஊடகத்திடம் இவ்வாறு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.