தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த வார இறுதியில் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதியன்று தொடர்ச்சியாக பல நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இதையடுத்து, அவர்களைத் தேடும்பணி ஏப்ரல் 14ஆம் தேதியன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
கிழக்கு ஹுவாலியன் மாவட்டத்தில் ஷகாடாங் பள்ளத்தாக்குப் பாதையில் சனிக்கிழமை (ஏப்ரல் 13) அன்று ஆண் ஓட்டுநர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்தது.
இந்தப் பள்ளத்தாக்குப் பாதையில்தான் சிங்கப்பூர் தம்பதிகள் காணாமற்போனதாக நம்பப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்படுவதற்குக் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு முன்னர், ஏப்ரல் 3 ஆம் தேதி தைவானிய நேரப்படி காலை 7.20 மணியளவில் அப்பாதையில் அவர்கள் கடைசியாக இறங்குவதைக் காட்டும் காணொளிப் பதிவு வெளியிடப்பட்டது.
காணாமற்போன சிங்கப்பூர் தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் ஒரு வாரத்திற்கு முன்பு தைவான் வந்தடைந்தனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துகொள்ளவதாக தைப்பேவில் இருக்கும் சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் மூலம் காணமற்போன தம்பதியரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், தேடுதலில் ஈடுபடுவோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, சரியான நேரத்தில் தேடுதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறினர்.
அபாயங்கள் தணிந்தவுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தைவானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.