புத்ராஜெயா: சூரியத் தகடுத் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் 970 மில்லியன் (S$276 மில்லியன்) ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த வழக்கில் அரசாங்க வழக்கறிஞராக திரு கோபால் ஸ்ரீராம் செயல்பட்டார்.
அவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.
வழக்கில் அரசாங்க வழக்கறிஞராக திரு கோபால் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டது செல்லுபடியாகாது என்று கூறியும் தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சூரியத் தகடுத் திட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரியும் ரோஸ்மா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதை மலேசியாவின் கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு தொடர்பாக ஏற்பட்ட 30,000 ரிங்கிட் செலவை ரோஸ்மா ஏற்க வேண்டும் என்று அது உத்தரவிட்டது.
ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ரோஸ்மா மேல்முறையீடு செய்துள்ளார். அவர் 2 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.