குவாங்ஜு: உலகின் நெருக்கடியான சூழல்கள் மற்ற நாடுகளுக்கும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலை உள்ளது.
இதனால், எதிர்பாரா அச்சுறுத்தல்களுக்கு தயாராகும் விதமாக அமெரிக்க, தென்கொரிய சிறப்புப் படைப் பிரிவினர் போர்ப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று அமெரிக்கப் படைத் தளபதி கூறியுள்ளார்.
“அமெரிக்க வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரிய வரும், அடுத்த அச்சுறுத்தல் எங்கிருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்துவிட முடியாது என்பது,” என்று பிரிகேடியர் ஜெனரல் டெரக் லிப்சன், பயிற்சிக்கு இடையே வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
அணுவாயுத நாடான வடகொரியா அண்மைய ஆண்டுகளில் ஆயுதங்கள் தயாரிப்பதில் முன் எப்போதும் காணாத வகையில் முன்னேறியுள்ளது. இதில் பெரும் அளவிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஏவுகணைத் தற்காப்பு முறைகளை முறியடிக்கக்கூடிய நுட்பமான ஏவுகணைகள் தயாரிப்பும் உள்ளடங்கும்.
இதில் முதல் முறையாக போரில் வடகொரிய ஏவுகணைகள் உக்ரேனில் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தியுள்ளதை அமெரிக்க அதிகாரிகளும் நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், ஆசியாவில் தென்சீனக் கடல் பகுதி, தைவான் ஆகிய இடங்களில் உள்ள போர்ப் பதற்றம் இந்த வட்டாரம், உலக நாடுகள் ஆகியவற்றையும் உள்ளிழுக்கக்கூடியதாக இருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.