கோலாலம்பூர்: நாட்டின் நிலைத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படும் நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்படாது என்று மலேசிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் தெரிவித்துள்ளார்.
இது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கத்துக்கு வலுசேர்த்துள்ளது.
“அரசியல் தந்திரங்களில் ஈடுபவோர் அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். தற்போது நடப்பில் இருக்கும் அரசியல் சூழலை அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை மதிக்க வேண்டும்,” என்று ஜனவரி மாதம் அரியனை ஏறிய பிறகு, முதல்முறையாக மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மாமன்னர் கூறினார்.
இந்த உரை பிப்ரவரி 26ஆம் தேதியன்று இடம்பெற்றது.
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டில் நடைபெற இருக்கிறது.
திரு அன்வார் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் துபாயில் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போது பேசிய பிரதமர் அன்வார், தமது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்று மலேசியர்களுக்கு உறுதி அளித்தார்.
அதே சமயம், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபடவில்லை என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைப்பதிலும் மானியங்கள் தொடர்பான கொள்கைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதிலும் மலேசியா கவனம் செலுத்த வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
“1998ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக இன்றைய அரசாங்கத்துக்குப் பெரும் கடன் சுமை இருப்பது மனவேதனையை அளிக்கிறது.
“இத்தகைய பலவீனமிக்க நிதி நிலை நிலவும்போது புதிய மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டிவிடத் தேவையான நிதிச் சலுகைகளை வழங்குவதும் சவால்மிக்கதாகிவிடும்,” என்றார் மாமன்னர் இப்ராகிம்.
நாட்டுக்கு மிகவும் முக்கியமான விவகாரம் குறித்து மிகத் தெளிவாக, சுற்றிவளைக்காமல் மாமன்னர் இப்ராகிம் பேசினார்.
முக்கிய விவகாரம் குறித்து பேசியபோது நாடாளுமன்றத்தில் நிலவிய இறுக்கமான சூழலை சற்று தளர்த்த ஆங்காங்கே நகைச்சுவையையும் அவர் புகுத்தினார்.
“நான் நீண்டநேரம் பேசினால் நாடாளுமன்றத்தில் இருக்கும் சிலர் தூங்கிவிடுவர் என்று நினைக்கிறேன். எனவே, எனது உரையை ரத்தினச் சுருக்கமாக வைத்துக்கொள்கிறேன்,” என்று நாடாளுமன்ற உரையின்போது மாமன்னர் இப்ராகிம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு மலேசிய நாடாளுமன்றத்தில் சிரிப்பொலி எதிரொலித்தது.