ஒசாகா: மலேசியாவில் வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மையில் ஜப்பானால் பயன்படுத்தப்படும் பல புதிய முறைகளை மலேசியா பின்பற்ற உள்ளது.
இயற்கைப் பேரிடர்களைச் சமாளிப்பதில், குறிப்பாக நீண்டகால நோக்கில் இத்தகைய அணுகுமுறைகள் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக மலேசியத் துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி புதன்கிழமை (பிப்ரவரி 21) தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பிரச்சினைகளைத் திறம்பட நிர்வகிக்கும் வகையில் நீண்டகாலத் திட்டங்களைத் வகுப்பதற்கு ஒசாகாவின் அனுபவம் முக்கியமானது என்று நம்புவதாக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அகமட் ஸாஹிட் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஆகிய அமைப்புகள் இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கும் என்றார் அவர்.
வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவது மட்டுமல்ல. புதிய தொழில்நுட்பங்களுடன் நீர்ப்பாசனம், வடிகால், வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பற்றியதும் ஆகும் என்று அவர் கூறினார்.