மணிலா: கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி 40 மீட்டரிலிருந்து 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் குறைந்தது 15 பேர் மாண்டனர், இருவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து பிலிப்பீன்சின் மத்தியப் பகுதியில் பிப்ரவரி 20ஆம் தேதி பிற்பகல் நிகழ்ந்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
கடந்த இரண்டு நாள்களாக அப்பகுதியில் மழை பெய்ததாகவும் சாலை ஈரமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லாரியின் பிரேக் பிடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக லாரி ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தததாகவும் அதிகாரிகள் கூறினர்.
காயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்படக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது, சாலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால் பிலிப்பீன்சில் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.