கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கிற்கு வழங்கிய அரச மன்னிப்பை தற்காத்து பேசியுள்ளார் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம்.
அண்மையில் திரு நஜிபுக்கு அவரது தண்டனை காலம் பாதியாக குறைக்கப்பட்டது. அது மலேசியாவில் பேசு பொருளாக மாறியது.
இந்த முடிவு ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற விமர்சனம் எழுந்ததுள்ளது.
மாமன்னரின் தீர்ப்பு இறுதியானது. மன்னர் அவரது தீர்ப்பு குறித்து எந்த விளக்கமும் தர தேவையில்லை. கருணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று திரு அன்வார் திங்கட்கிழமை தெரிவித்தார்.
மக்கள் தங்கள் கருத்துகளை கூறலாம் இருப்பினும் விளக்கம் தந்த பிறகு அதுகுறித்து தொடர்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும் என்றார் அவர்
அரச மன்னிப்பு தொடர்பாக அம்னோ கட்சி தமக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் திரு அன்வார் கூறினார்.
முன்னதாக நஜிபுக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அதன்கீழ் திரு நஜிப், 2028ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.
முன்னர் அவருக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் (S$59 மில்லியனுக்குமேல்) அபராதத்தை அரச மன்னிப்பு வாரியம் 50 மில்லியன் ரிங்கிட்டாக (S$14 மில்லியனுக்குமேல்) குறைத்துள்ளது.
திரு நஜிப் அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு அவரது சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும் என்று வாரியம் தெரிவித்தது.