ஈப்போ: சீனப் புத்தாண்டு காலத்தில் ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
சில போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்றாலும் நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் திரு லோக்.
முன்பு, ஜோகூர் கடற்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீராக்க சில மணி நேரம் ஆனது என அவர் மேலும் கூறினார்.
ஈப்போ ரயில் நிலையத்தில் கடன் பற்று அட்டைகள், ரொக்க அட்டைகளைப் பயன்படுத்தி கேடிஎன்பி நிறுவனத்தின் கோமியுட்டர் ரயில்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை வியாழக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்கி வைத்த பிறகு திரு லோக் இவ்வாறு தெரிவித்தார்.
“சீரான போக்குவரத்திற்கு உதவும் வகையில் இரு திசைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாலைத் தடங்கள் செயல்படுத்தப்படும். மேலும், கூடுதலாக குடிநுழைவு மற்றும் சேவை முகப்புகள் திறக்கப்படும்,” என்றார் திரு லோக்.
ஜோகூர் கடற்பாலத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியின் திறன் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டின்போது ஜோகூர் கடற்பாலம் மற்றும் துவாஸ் வழியாக 400,000க்கும் அதிகமான பயணிகள் மலேசியாவிற்குள் நுழைவார்கள் என எதிர்பார்ப்பதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை பிப்ரவரி 6ஆம் தேதி கூறியது.