சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான இரு சோதனைச்சாவடிகளிலும் நெரிசல் குறைந்திருப்பதாக ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி செவ்வாய்க்கிழமை கூறினார்.
பல்வேறு உத்திகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நிலவரம் மேம்பட்டதாக ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“பிஎஸ்ஐ (பங்குனான் சுல்தான் இஸ்கந்தர்), கேஎஸ்ஏபி (காம்ப்ளெக்ஸ் சுல்தான் அபுபக்கர்) இரண்டிலும் போக்குவரத்து உத்திகளை வெற்றிகரமாக அமல்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இரு குடிநுழைவு வளாகங்களின் செயலாற்றல், தயார்நிலை குறித்து ஏகப்பட்ட நல்ல கருத்துகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன,” என்று திரு ஒன் ஹஃபிஸ் எழுதியிருந்தார்.
இவ்விரு குடிநுழைவு வளாகங்களும் உட்லண்ட்ஸ் கடற்பாலத்தோடும் துவாஸ் இரண்டாம் இணைப்போடும் இணைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நிலவரம் மேம்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாதென்றும் திரு ஒன் ஹஃபிஸ் வலியுறுத்தினார்.
“இரு சோதனைச்சாவடிகளிலும் நெரிசல் குறைந்திருந்தாலும், நாம் முற்றிலும் மெத்தனமாக இருந்துவிடமுடியாது. இந்தக் கடப்பாடு தொடரவேண்டும். எல்லைக்கடப்பு சரளமாக இருப்பதை உறுதிப்படுத்தவும், மக்கள், பயணிகள் ஆகியோரின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கவும், உலகின் பார்வையில் ஜோகூருக்கும் மலேசியாவுக்கும் நற்பெயர் ஈட்டித்தரவும் தயார்நிலை தொடர்ந்து நிலைநாட்டப்படவேண்டும்,” என்றார் அவர்.