கிள்ளான்: அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு தங்களுக்கு ஊதியம் குறைவு என்று சாக்குப்போக்கு சொல்லக்கூடாது என்று மலேசியக் காவல்துறைத் தலைவர் ரசாருதின் ஹுசேன் கூறியிருக்கிறார்.
பதவியிலிருக்கும் ஒருவர் ஊழல்வாதியாகவோ தவறான நடத்தையுள்ளவராகவோ மாறுவதற்கு அவரது மனப்போக்குதான் காரணம் என்றார் அவர்.
அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கான காரணங்களில் குறைந்த ஊதியம் என்பதும் அடங்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
“எடுத்துக்காட்டாக, ‘கான்ஸ்டபிள்’ எனப்படும் காவலரின் அடிப்படைச் சம்பளம், படித்தொகை எல்லாவற்றையும் கணக்கிட்டால் அவருக்கு ஒரு மாதத்தில் கையில் கிடைக்கும் ஊதியம் 2,500 ரிங்கிட் (S$706).
“கோலாலம்பூரில் இத்தகைய பதவியில் இருப்போர் நகர்ப்புற ஏழைகளாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இது அதிக வருமானமாகக் கருதப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 4ஆம் தேதி, பண்டாமரான் சந்தை உலாவுக்குப் பிறகு திரு ரசாருதின் செய்தியாளர்களிடம் பேசினார்.
எது எப்படியாயினும், ஊதியம் குறைவு என்பதால் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
“நிறுவன இயக்குநர்கள் ஊழலில் பிடிபடுவதை ஊடகச் செய்திகளில் காண்கிறோம். அவர்கள் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களா?” என்று அவர் கேட்டார்.
இளம் அதிகாரிகளை ஊழலிலிருந்து பாதுகாப்பதுடன் அதை நிராகரிக்க அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய தேவையை திரு ரசாருதின் வலியுறுத்தினார்.
இல்லாவிட்டால், காவல்துறையினருக்குப் பதில் தனியார் பாதுகாப்பு அலுவலர்களை நாடும் போக்கு அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.