லண்டன்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவும் இணைந்து தயாரித்த மலேரியா தடுப்பூசி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான பரிசோதனை முயற்சியாக ஓராண்டுக்குமுன் அந்தத் தடுப்பூசி போடப்பட்ட இளம் பிள்ளைகளில் முக்கால்வாசிப் பேர் மலேரியா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றிருப்பதாக பிப்ரவரி 1ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் மூன்றும் உலகச் சுகாதார நிறுவனமும் ஏற்கெனவே அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன.
மலேரியாவைத் தடுக்க, இந்த ஆண்டு (2024) பயன்பாட்டுக்கு வந்துள்ள இரண்டாவது தடுப்பூசி இது.
ஜிஎஸ்கே நிறுவனம் தயாரித்த மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி ஜனவரி மாதம் கேமரூனில் அறிமுகம் கண்டது.
இரு தடுப்பூசிகளுமே மலேரியாவுக்கு எதிரான சிறப்பான தடுப்பாற்றலைக் கொண்டவை என்று கூறப்படுகிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே உள்ள பகுதியில் ஆண்டுதோறும் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், குறிப்பாகக் குழந்தைகள், மலேரியாவில் மாண்டுபோகின்றனர்.
இத்தகைய தடுப்பூசிக்காக பல ஆண்டுகளாகக் காத்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிப் பிரிவுத் தலைவர் மேரி ஹேமெல் கூறினார்.
பாதுகாப்பான, ஆற்றல்மிக்க இரண்டு தடுப்பூசிகள் கிடைத்திருப்பதால் தேவையை ஈடுகட்ட இயலும் என்றார் அவர்.
ஆர்21 எனப்படும் இரண்டாவது தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை முடிவுகள் பிப்ரவரி 1ஆம் தேதி லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகள் நான்கைச் சேர்ந்த 4,800 பிள்ளைகள் அதில் பங்குபெற்றனர். ஐந்து முதல் 36 மாதங்கள் வரையிலான வயது நிரம்பிய பிள்ளைகளில் முக்கால்வாசிப் பேர் மலேரியாவிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.