அம்மான்: ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமெரிக்க வீரர்கள் மாண்டனர்.
தாக்குதல் காரணமாக பலர் காயமடைந்தனர்.
அதை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று ஜோர்தான் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு ஜோர்தானும் எகிப்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட முகாம் சிரியாவுடனான் எல்லைப் பகுதியில் உள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது இது முதல்முறை.
அமெரிக்காவுக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களை ஜோர்தானிய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் முஹானத் முபைதீன் தெரிவித்துக்கொண்டார்.
தாக்குதலில் ஜோர்தானிய ஆயுதப் படைகளைச் சேர்ந்த வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
“ஜோர்தானின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜோர்தானுக்கு ஆதரவாக இருக்கிறோம். மத்திய கிழக்கு அமைதியாகவும் நினைத்தன்மையுடனும் இருக்க அனைத்து வகை வன்முறைச் சம்பவங்களையும் எதிர்க்கிறோம்,” என்று எகிப்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
“இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரே எதிரியைத்தான் எதிர்த்துப் போரிடுகின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்க வீரர்களின் தியாகங்கள் என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படும். காயமடைந்த அமெரிக்க வீரர்கள் விரைவாகக் குணமடைய வேண்டிக்கொள்கிறோம்,” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறினார்.