நியூயார்க்: அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது.
இதில் சில ஐநா அகதிகள் முகாமைச் சேர்ந்த ஐநா ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதைத் தொடர்ந்து ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அகதிகள் முகாம் ஐநா ஊழியர்கள் தண்டிக்கப்படுவர் என்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) அன்று கூறினார்.
இதனால் பல நாடுகள் பாலஸ்தீனர்களுக்கான ஐநா அகதிகள் அமைப்புக்கு தரும் நிதி ஆதரவை நிறுத்தி வைத்துள்ளதால், அவற்றை மீண்டும் வழங்குமாறு அந்த அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“பயங்கரவாதத் செயல்களில் ஈடுபட்ட ஐநா ஊழியர்கள், அவர்கள் மீது குற்றவியல் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் அதற்கான பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
“ஐநா செயலகத்தின் வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்ப அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐநா தகுதியுடைய அமைப்புடன் ஒத்துழைக்க தயார்,” என்று திரு குட்டரஸ் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
அதே சமயம், பல பத்தாயிரக்கணக்கான ஊழியர்களில், பலர் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில், பணிபுரிகின்றனர் என்ற அவர், அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கூறினார். அங்கு பரிதவிக்கும் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது பற்றி அவர் முதன் முதலாக கருத்துத் தெரிவிக்கையில், இந்த அருவருக்கத்தக்க புகார்களில் தொடர்புடைய ஐநா ஊழியர்கள் குறித்து அவர் விவரங்களை அளித்தார் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் 12 பேரில் 9 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் மாண்டுவிட்டார் என்றும் மற்ற இருவரின் அடையாளம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.
இது குறித்த புகார்கள் எழுந்ததால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் நிதி ஆதரவை நிறுத்தி வைத்தன. தற்பொழுது பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, ஆகிய நாடுகளும் சனிக்கிழமை (ஜனவரி 27) அன்று நிதி ஆதரவை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.