பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது அடுத்த வாரம் குற்றம் சுமத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸம் பகி ஜனவரி 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 85 வயது திரு டயிம், ஜனவரி 25ஆம் தேதியன்று வீடு திரும்பிவிட்டதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, திரு அஸம் இவ்வாறு கூறினார்.
1984ஆம் ஆண்டுக்கும் 2001ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், திரு டயிம் மலேசிய நிதி அமைச்சராக இருமுறை பதவி வகித்தார்.
அவருக்கு எதிரான விசாரணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியதாக ஆணையம் தெரிவித்தது.
மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமது சொத்துகள் குறித்த விவரங்களை 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஆணையம் கூறியது.
இதுதொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க திரு டயிம் விண்ணப்பம் செய்தார். இவ்வாறு அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு ஐந்து முறை நீட்டிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.