ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது.
இதில் அதிபர் வேட்பாளராக பிரபோவோ சுபியாந்தோ போட்டியிடுகிறார்.
திரு பிரபோவோ இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு அதிபர் தேர்தல்களில் திரு விடோடோவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அவருடன் இணைந்து துணை அதிபர் பதவிக்காக திரு விடோடோவின் மகன் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அதிபராகப் பதவி வகிப்பதால் தமக்குப் பிடித்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவோ பிரசாரம் செய்யவோ தடை ஏதுமில்லை என்று திரு விடோடோ தெரிவித்துள்ளார்.
தமக்குப் பிடித்த வேட்பாளருக்குப் பிரசாரம் செய்யும்போது அரசாங்கத்துக்குச் சொந்தமான இடங்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் போதும் என்றார் அவர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் விடோடோவின் இந்தக் கருத்தை எதிர்த்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
வாரிசு அரசியலுக்கு வழிவகுத்து, தொடர்ந்து அதிகாரத்தைத் தமது கையில் வைத்திருக்க திரு விடோடோ முயற்சி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் குறைகூறியுள்ளனர்.
திரு ஜிப்ரான் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட ஏதுவாக வேட்பாளருக்கான தகுதி முறை மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.