வாஷிங்டன்: ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது தொடர்பாக கூடிக் கலந்துரையாட ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில், பிடிபட்ட உக்ரேனிய ராணுவ வீரர்களில் 65 பேர் இருந்ததாக ரஷ்யா தெரிவித்தது.
விமானத்தில் மொத்தம் 74 பேர் இருந்ததாகவும் அது விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த அனைவரும் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த 65 போர்க் கைதிகளை உக்ரேனிடம் ஒப்படைத்து அவர்களுக்குப் பதிலாக உக்ரேன் பிடித்துவைத்துள்ள ரஷ்ய வீரர்களை மீட்கத் திட்டமிட்டிருந்ததாக ரஷ்யா கூறியது.
விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாகக் கலந்துரையாட அவசரநிலைக் கூட்டத்தை நடத்த ரஷ்யா கேட்டுக்கொண்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார்.
தனக்குச் சொந்தமான அந்த ராணுவ விமானத்தை உக்ரேன் வேண்டுமென்றே சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
விமானத்தைக் குறிவைத்து உக்ரேன் ஏவுகணை பாய்ச்சியதாக திரு லாவ்ரோவ் கூறினார்.
அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் வர்ணித்தார்.
இந்நிலையில்,சிங்கப்பூர் நேரப்படி ஜனவரி 26ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்துக் கலந்துரையாட ஐநா பாதுகாப்பு மன்றம் முடிவெடுத்துள்ளது.
ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து உக்ரேன் கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும், ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானங்களைச் சுட்டு வீழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடரும் என்று உக்ரேன் கூறியது.
உக்ரேன் மீது தாக்குதல் நடத்த அந்த விமானங்களில் ரஷ்யா ஏவுகணைகளை ஏற்றிச் செல்வதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், ஜனவரி 24ஆம் தேதியன்று போர்க் கைதிகளை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குப் பிடிபட்ட ரஷ்ய வீரர்களைக் கொண்டுபோய் சேர்த்துவிட்டதாகவும் உக்ரேன் தெரிவித்தது.
இந்நிலையில், விமானம் விழுந்து நொறுங்கியதற்கான சூழ்நிலைகள் ஆராயப்பட்டு, தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனவரி 24ஆம் தேதியன்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
உக்ரேனியப் போர்க் கைதிகளின் உயிர்களுடன் ரஷ்யா விளையாடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.