புத்ராஜெயா: மலேசிய அரசாங்கத்துக்காக 4.5 பில்லியன் ரிங்கிட் (S$1.28 பில்லியன்) பெறுமானமுள்ள வாகனங்களை கொள்முதல் செய்வதிலும் அவற்றை நிர்வகிப்பதிலும் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை நடத்துகிறது.
முன்னாள் நிதி அமைச்சர், வர்த்தகர் ஒருவர், முக்கிய அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வர்த்தகருக்குச் சொந்தமான வீட்டிலும் நான்கு நிறுவனங்களிலும் ஜனவரி 18ஆம் தேதியன்று ஆணையத்தின் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்களை நிர்வகிக்க முதலில் ஒரு நிறுவனம் தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை நிதி அமைச்சு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பிறகு அந்தப் பொறுப்பு வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆஸம் பாகி கூறினார்.
பாதிக்கப்பட்ட நிறுவனம் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக திரு ஆஸம் பாகி கூறினார்.