ஹெனான்: சீனாவின் யன்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்சாய் பள்ளியின் மாணவர் விடுதியில் ஜனவரி 19ஆம் தேதியன்று தீ மூண்டதை அடுத்து, 13 மாணவர்கள் மாண்டனர். ஒருவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
தீச்சம்பவம் இரவில் நிகழ்ந்ததாகவும் அப்போது மாணவர்கள் விடுதியில் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், ஏறத்தாழ 40 நிமிடங்கள் போராடித் தீயை அணைத்தனர்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய சீனாவின் ஹெனான் மாநிலக் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தைச் சுற்றி காவல்துறை அதிகாரிகள் தடுப்பு போட்டுள்ளனர்.
பள்ளிக் கட்டடத்தின் பக்கவாட்டில் இருந்த சன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
தீச்சம்பவம் காரணமாக மாண்ட மாணவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் என்றும் அவர்கள் 9 வயதுக்கும் 10 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி 21 தேதி காலை, பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன.
தீச்சம்பவம் தொடர்பாகக் குறைந்தது ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்தது.