மாஸ்கோ: செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவர ஹூதி தரப்பின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.
ஈரானின் ஆதரவைப் பெற்ற, ஏமனைச் சேர்ந்த அந்தக் கிளர்ச்சியாளர்கள் குழு, செங்கடலில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குகிறது. காஸாவில் அவதியுறும் பாலஸ்தீனர்களுக்காக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்வதாக அது கூறுகிறது.
இவ்வேளையில், அக்குழுவின் மூத்த அதிகாரியான முகமது அல்-புக்கைதி ரஷ்யாவின் இஸ்வெஸ்டியா நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில், குறிப்பிட்ட சில நாடுகளின் கப்பல்களை மட்டுமே தாங்கள் தாக்குவதாகக் கூறியுள்ளார்.
“ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுக்கு செங்கடல் வட்டாரத்தில் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை,” என்றார் அவர்.
“மேலும், அந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக செங்கடலைக் கடப்பதை உறுதிசெய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் தடையற்ற கப்பல் போக்குவரத்து ஏமனுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது,” என்றார் அவர்.
இருப்பினும் இஸ்ரேலுடன் எந்த வகையிலாவது தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் பிரிட்டனும் அண்மையில் ஏமன் மீது ஆகாயத் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அவ்விரு நாட்டுக் கப்பல்களும் தாக்கப்படும் என்று ஹூதி தரப்பு அண்மையில் கூறியிருந்தது.
“கப்பல்களைக் கைப்பற்றுவதோ மூழ்கடிப்பதோ எங்கள் இலக்கு அன்று. யூத நாடான இஸ்ரேலின் செலவுகளை அதிகரிக்கச் செய்வதே நோக்கம். காஸாவில் போரை நிறுத்த அது உதவும்,” என்று திரு புக்கைதி கூறினார்.
இதற்கிடையே, ஜனவரி 18ஆம் தேதி பின்னேரத்தில் ஹூதி தரப்பினர், அமெரிக்கக் கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக வாஷிங்டன் கூறியது.
அந்த ஏவுகணைகள் கப்பலுக்கு அருகில் கடல் பரப்பில் விழுந்ததாகவும் அவற்றால் யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது.
அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஹூதி தரப்பு, தனது ஏவுகணைகள் கெம் ரேஞ்சர் எனும் கப்பலை நேரடியாகத் தாக்கியதாகக் கூறியது.
தற்போது அந்தச் சிறிய கப்பல் சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திலிருந்து குவைத் நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.