டெல் அவிவ்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, காஸா போர் முடிவுக்கு வந்த பிறகு பாலஸ்தீனத் தனி நாடு அமைக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் வலியுறுத்தலுக்குத் தாம் அமெரிக்காவிடம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
காஸாவில் ‘முழுமையாக வெற்றிபெறும் வரை’ போர் தொடரும் என்றார் அவர்.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்களைத் துடைத்தொழிப்பதும் அவர்களிடம் இன்னும் சிக்கியுள்ள இஸ்ரேலியப் பிணையாளிகளை மீட்பதும் இலக்குகள் என்று அவர் கூறினார்.
இதற்குப் பல மாதங்கள் பிடிக்கக்கூடும் என்றார் இஸ்ரேலியப் பிரதமர்.
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலால் ஏறக்குறைய 25,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறுகிறது.
அங்குள்ள 85 விழுக்காட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்ட நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சில் ஈடுபடுமாறு இஸ்ரேலுக்குக் கடுமையான நெருக்குதல் அளிக்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் பலவும், ‘இரு நாட்டுத் தீர்வை’ வலியுறுத்துகின்றன.
ஆனால் திரு நெட்டன்யாகு அதற்கு இணங்கவில்லை என்பதை செய்தியாளர் கூட்டத்தில் அவர் வெளியிட்ட கருத்துகள் காட்டுகின்றன.
ஜோர்தான் ஆற்றுக்கு மேற்கேயுள்ள நிலப்பகுதி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று அவர் நிபந்தனை விதிக்கிறார். அந்தப் பகுதி பாலஸ்தீனத்தையும் உள்ளடக்குகிறது.