ஜெனிவா: உக்ரேனுக்கு இவ்வாண்டு மனிதாபிமான உதவி வழங்கவும் அந்நாட்டைவிட்டுத் தப்பியோடிய மில்லியன்கணக்கான அகதிகளுக்குக் கைகொடுக்கவும் 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் (5.6 பில்லியன் வெள்ளி) தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக காஸா போர் மீது அதிக கவனம் இருந்துவரும் நிலையில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் போர் மூன்றாம் ஆண்டை எட்டவுள்ளது.
உக்ரேனில் உள்ள 8.5 மில்லியன் மக்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் 2.3 மில்லியன் அகதிகள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் சமூகங்களுக்கும் உதவுவது ஐநாவின் இலக்கு.
உக்ரேனில் இவ்வாண்டு 14.6 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று ஐநா தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அந்நாட்டு மக்கள்தொகையில் 40 விழுக்காடாகும்.
அவர்களில் ஆக அதிக உதவி தேவைப்படும் 8.5 மில்லியன் மக்களுக்குக் கைகொடுக்க ஐநா எண்ணம் கொண்டுள்ளது.