வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) அன்று தமது தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மீது முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருக்கு பெருஞ்சுரப்பி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து தமக்கு தெரிவிக்காமல் இருந்தது தவறுதான் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சிறிய வர்த்தகங்களைப் பார்வையிட வந்த அதிபர் பைடன், அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்பொழுது தேசிய பாதுகாப்பு, அதிகார சங்கிலித் தொடர் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்காப்பு அமைச்சர் ஆஸ்டின் மீது நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த திரு பைடன் தமக்கு நம்பிக்கை உள்ளதாக சொன்னார். பின்னர் திரு ஆஸ்டின் இதுபற்றி தமக்கு முன்கூட்டியே தெரிவிக்காததில் தவறிழைத்து விட்டார் என்று கருதுகிறீர்களா எனக் கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்துள்ளார் அதிபர் பைடன்.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்ட திரு ஆஸ்டின் பின்னர் சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஜனவரி 1ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவரது பெருஞ்சுரப்பியின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
எனினும், அவரது தற்காப்பு அமைச்சு அவரது அண்மைய சிகிச்சை குறித்து மூன்றரை நாட்களுக்கு பின்னரே அதிபர் மாளிகைக்கு தகவல் தெரிவித்தது. அத்துடன், அவரது பெருஞ்சுரப்பியில் புற்றுநோய் கண்டிருப்பது பற்றி தங்களுக்கு இந்த வாரம்தான் தெரிய வந்ததாக அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கினர்.