கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரவு என்றும் உக்ரேனுக்கு இருக்கும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
முன்னறிவிப்பின்றி உக்ரேன் தலைநகரான கீவுக்கு நவம்பர் 20ஆம் தேதியன்று ஆஸ்டின் வருகை மேற்கொண்டார்.
“முக்கியத் தகவல் ஒன்றைக் கூறுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகச் சுதந்திரம் பெறப் போராடிவரும் உக்ரேனுக்குத் தொடர்ந்து அமெரிக்கா துணையாக நிற்கும். இது தற்போதைக்கும் எதிர்காலத்திற்குமான ஆதரவு,” என்று திரு ஆஸ்டின் குறிப்பிட்டார்.
உக்ரேன்மீது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா முழுவீச்சாகப் படையெடுப்பைத் தொடங்கியதை அடுத்து, போலந்திலிருந்து ரயில் வழியாக கீவுக்குத் திரு ஆஸ்டின் சென்றுள்ளது இது இரண்டாவது முறை.
உக்ரேனுக்கு உதவியளிப்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு அதிகரித்துவரும் நிலையில் திரு ஆஸ்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.