பெய்ஜிங்: சீனாவின் ஃபூஜோ நகரில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) அன்று மாலத்தீவு அதிகாரிகள் ஒரு முதலீட்டு சந்திப்பை நடத்தியுள்ளனர்.
முதலீட்டு சந்திப்பு முடிந்த பின் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுவும் அவரது தலைமையிலான பேராளர் குழுவும் சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளனர். சீனப் பிரதமர் லி சியாங்கையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு சீனாவுக்கு ஒரு வாரம் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முடிவில் சில உடன்பாடுகளும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பூசல் எழுந்துள்ள நிலையில் சீனாவுடன் மாலத்தீவு மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
முகம்மது முய்சு இந்தியாவின் ஆதிக்கம் மாலத்தீவில் அதிகமாக உள்ளதாக நவம்பர் மாத தேர்தல் பிரசாரத்தில் குறைகூறியிருந்தார். அண்மையில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை மூட அவரது அரசாங்கம் உத்தரவிட்டது.
மேலும் சில நாள்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் விதமாக மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். அது பெரும் சர்ச்சையாக வெடித்து இரு நாடுகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.