கோலாலம்பூர்: குறிப்பிட்ட சிலருக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தும்போது அதை அரசியலாக்கக்கூடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
தனிநபர், கட்சி விசுவாசம் இருப்பது இயல்பு என்றபோதும், அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் திரு அன்வார்.
“முக்கியமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது, அது சர்ச்சைக்குரிய விவகாரமாகிறது. அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக விசாரணைக்கு எதிராக சவால் விடுக்கப்படும். தனிநபர் ஒருவருக்கு அல்லது கட்சிக்கு விசுவாசமாக இருப்பது அவரவர் உரிமை.
“ஆனால் ஆதாரங்கள் இருந்தால் அவர் யாராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றார் பிரதமர் அன்வார்.
பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்தது தமக்குப் பலனைத் தந்துள்ளதாக திரு அன்வார் குறிப்பிட்டார். தமக்குப் பயம் என்பதே என்னவென்று தெரியாமல் போய்விட்டதாக அவர் கூறினார்.
“எனக்குப் பயம் அறவே இல்லாமல் போய்விட்டது. எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். ஊழல் குற்றங்கள் சகித்துக்கொள்ளப்படாது. ஊழலில் ஈடுபவோர் என்னை ஆதரிப்பவராகவோ அல்லது எதிர்ப்பவராகவோ இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன்,” என்றார் திரு அன்வார்.