தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 168 பேர் மாண்டனர். இந்நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம் மீட்பு பணிகளுக்கு இடையூறாக கடும் பனி பொழிந்து வருகிறது.
சாலைகள் உடைந்துள்ளதால் 2,000க்கும் அதிகமான மக்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கி வருகின்றனர்.
சூசு நகரில் இடிபாடுகளுக்கு இடையில் 5 நாள்கள் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது சில இடங்களில் மழை பெய்து வருவதால் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். சரிந்துள்ள கட்டடங்களின் மீது கடுமையான பனி படர்வதால் அவை ஆபத்தாக மாறலாம் என்று அவர்கள் கூறினர்.
இஷிகாவா பகுதியில் 18,000க்கும் அதிகமான வீடுகளில் இன்னும் மின்சாரம் இல்லை. மேலும் 66,000க்கும் அதிகமான வீடுகளில் தண்ணீர் சேவைகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை.