சென்னை: பொருளியல் வளர்ச்சியில் அதி விரைவுப் பாதையில் தமிழ்நாடு பயணித்து வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பொருளியல் வளர்ச்சி மேலும் உயரும் என நம்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஞாயிறு காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இரு நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த 450க்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வரவேற்புரை நிகழ்த்திய தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய பொருளியல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றார்.
“ஆட்டோ மொபைல், மின்சார வாகனம், டயர் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 70 விழுக்காடு தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.
“மின்னியல் பொருள்கள் உற்பத்தியைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30%. தோல் பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறோம்.
“இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மொத்த பெண்களில் தமிழ்நாட்டில் மட்டும் 43% உள்ளனர். தமிழ்நாடு 45,000 தொழிற்சாலைகளுடன் உற்பத்தி மையமாகத் திகழ்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இளையர்களுக்கு எதிர்காலம் தரும் மாநாடு
“கல்வி மற்றும் மருத்துவத்தில் நாட்டில் முன்னணியில் இருக்கிறோம். தமிழ்நாடு, ஒவ்வொரு 250 பேருக்கும் ஒரு மருத்துவரைக் கொண்டிருக்கிறது.
“மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பொறியியலாளர்களை உருவாக்குகிறோம். இந்தியாவின் முதல் 100 கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
“இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் திறமைமிக்க இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு,” என்று அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா கூறினார்.
இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்காளித்துவ நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் உள்ளன. இருநாள் மாநாட்டில் 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும் இந்த மாநாட்டில் தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிடாஸ், போயிங் நிறுவனங்களைத் தொடர்ந்து மேலும் சில நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மாநாட்டில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
40,500 பேருக்கு வேலை வாய்ப்பு
முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதன் மூலம் சுமார் 40,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஜியோ, ஹுண்டாய், வின்ஃபாஸ்ட், அடிடாஸ், கோத்ரெஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய ஆலைகள், அலுவலகங்களைத் திறக்க உள்ளன.
இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளபடி தமிழகத்தில் முதலீடுகளைச் செய்து செயல்பாடுகளைத் தொடங்கும்போது மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 40,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.