தோக்கியோ: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், கிட்டத்தட்ட 33,000 பேர் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமெரிக்கா ராணுவத் தளவாட உதவி வழங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
“நிலநடுக்க பாதிப்பில் இருந்து மீள அமெரிக்கா தனது நட்பு நாட்டுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளது. இதில் ராணுவத் தளவாட, உணவுப் பொருள்கள், தேவைப்படும் மற்ற பொருள்கள் போன்றவை தயார்ப்படுத்தப் படுகின்றன,” என்று ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் ராஹ்ம் இமானுவல் சமூக வலைத்தளமான எக்ஸில் பதிவு செய்தார்.
நிலநடுக்கத்திற்கு பிந்திய அவசரநிலை உதவி குறித்து ஜப்பான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜப்பான் தற்போதைய நிலையில், சீனா உள்பட மற்ற நாடுகள் உதவி செய்ய முன்வந்ததை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்பொழுது உதவிக்கு ஆள்பலத்தையோ மற்ற பொருள் உதவியையோ நாங்கள் ஏற்கப்போவதில்லை,” என்று ஜப்பானின் உயர் அதிகாரியான யோஷிமாசா ஹயாஷி கூறினார்.