கோலாலம்பூர்: அண்மையில் மலேசியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்மூலம் தாய்லாந்திற்குள் விநியோகிக்கப்படும் ஆபத்தான போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் 70 விழுக்காடு குறையும் என்று பேங்காக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆடவர் தாய்லாந்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முன்னிலையில் இருந்தவர். அவர் லாவோஸ் நாட்டில் பதுங்கியிருந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆடவர் டிசம்பர் 29ஆம் தேதி தாய்லாந்து - லாவோஸ் அதிகாரிகள் நடத்திய கூட்டு சோதனையில் பிடிபட்டதாக ‘பேங்காக் போஸ்ட்’ தகவல் வெளியிட்டது.
இதற்கு முன்னர் அந்த ஆடவரைப் பிடிக்க உதவும் நபருக்கு 38,500 வெள்ளி சன்மானம் தரப்படும் என்று தாய்லாந்து அறிவித்திருந்தது.
கைது செய்யப்பட்ட நபர் 2006ஆம் ஆண்டு முதல் ‘தங்க முக்கோணம்’ எனும் தாய்லாந்து, மியன்மார், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள மலைப்பகுதியில் போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார்.
கைது நடவடிக்கையின்போது 4.4. டன்னுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துளள்னர்.
ஆடவருக்குச் சொந்தமான சில நிலங்கள், வீடுகள், சொகுசு கப்பல்கள், வாகனங்கள் போன்ற சொத்துகளும் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.