பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோன் காஸாவில் நீடித்த போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் புதன்கிழமை (டிசம்பர் 27) அன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கின் பாலஸ்தீன பகுதி மனிதாபிமான நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கும் நேரம் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
“இனிவரும் நாள்களில் காஸாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரான்ஸ் ஜோர்தானுடன் இணைந்து பணியாற்றும்,” என்று திரு மெக்ரோன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளி இயக்கம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலால் போர் மூண்டது. திரு மெக்ரோன் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவுடன் நட்பில் உள்ளவர். இந்நிலையில், காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி நிலை, அங்கு சாதாரண மக்கள் போரில் சிக்கி இறப்பது குறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக திரு மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜோர்தான் ஆற்றின் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் பாலஸ்தீன மக்கள் மீது தொடுக்கும் வன்முறையையும் அங்கு இஸ்ரேலியர்கள் திட்டமிடும் புதிய குடியிருப்புகள் மீதும் நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என திரு மெக்ரோன் வலியுறுத்தினார்.
இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு பிரான்ஸ் சுதந்திரமான கடல் போக்குவரத்தை ஆதரிப்பதற்கும் லெபனானுடனான இஸ்ரேலிய எல்லையில் பாதுகாப்பை நிலைநாட்டியதற்கும் திரு மெக்ரோனுக்கு நன்றி தெரிவித்ததாக அவரது அலுவலகம் கூறியது.