ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசித் தீவில் உள்ள நிக்கல் தொழிற்சாலை ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் டிசம்பர் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 24ஆம் தேதி அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 18 பேர் மாண்டனர். மேலும் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மொரோவாலி தொழிற்பூங்காவில் உள்ள எஃகுத் தொழிற்சாலையில் ஊழியர்கள் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிப்பு நிகழ்ந்தது.
மின்வாகனங்களுக்கான மின்கலன்கள், எஃகு ஆகியவற்றின் தயாரிப்பில் அடிப்படை மூலப் பொருளாகத் திகழ்கிறது நிக்கல்.
அந்தத் துறையில் சீனாவின் முதலீடு அதிகரிக்கும் நிலையில், சம்பளம், வேலையிடச் சூழல் போன்ற அம்சங்கள் தொடர்பில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஆலை வளாகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதைப் படங்கள் காட்டுவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை தொழிற்சாலை நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக காவல்துறைக்கு தொழிற்சங்கம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாதுப் பாறையை உருக்கி உலோகத்தைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மேம்பட்ட முறையில் பராமரிக்கப்பட வேண்டும், நெருக்கடியைச் சமாளிக்கும் அளவிற்கு மருந்தகங்கள் மேம்படுத்தப்பட வேண்டும், சீனத் தொழிலாளர்கள் இந்தோனீசிய மொழியைக் கற்கவேண்டும் போன்றவை அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.
ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொளியில், “உயிரைவிட எந்த உற்பத்தியும் பெரிதன்று!” என்று ஊழியர்கள் கோஷமிடுவதைக் காணமுடிகிறது.
விபத்தில் மாண்டோரின் குடும்பங்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் இழப்பீட்டுத் தொகை அளித்திருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய ஒரு குடும்பத்தினர் 600 மில்லியன் ரூப்பியா ($51,500) இழப்பீடு பெற்றதாக ஏஎஃப்பி தெரிவித்தது.
விபத்தில் காயமடைந்த 30 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகக் காவல்துறை கூறியது.