கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் அடுத்த மாதம் மலேசியாவில் இன்னிசை மழை பொழிய இருக்கிறார். தலைநகர் கோலா லம்பூரில் நடக்கவிருக்கும் ஏ. ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை டிஎம்ஒய் கிரியேஷன் நடத்தவுள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இத்தருணத்தில், ஏ. ஆர். ரகுமானின் தீவிர ரசிகர்களின் பல மாத காத்திருப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘ஏ. ஆர். ரகுமான் சீக்ரேட் ஆஃப் சக்ஸஸ் லைவ் இன் மலேசியா 2023’ என்னும் நேரடி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் அரங் கேற உள்ளது.
ஜனவரி 28ஆம் தேதி இரவு 8 மணியளவில் புக்கிட் ஜலில் நேஷனல் அரங்கத்தில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியைப் பார்வையிட உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட 60,000 ரசிகர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசைப் புயலுடன் இணைந்து ரசிகர்களைக் கவர முன்னணி திரை நட்சத்திரங்களும் பிரபலங் களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்றைய திரை உலகின் ரசிகர் களைப் பெரிதும் கவரக்கூடிய பிரபல நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, யோகி பாபு, எஸ் ஜே சூர்யா ஆகியோரும் இசை அரங்கை அலங்கரிக்க இருக்கிறார்கள்.
தொலைக்காட்சிக் கலைஞர்கள் பிரியங்கா, முகேன் ராவ், புகழ் ஆகியோருடன் இணைந்து சின்னக் குயில் சித்ரா, உன்னி கிருஷ்ணன், ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன், ஹரிஹரன், கார்த்திக், நரேஷ் ஐயர், ஷாஷா திருப்பதி, பென்னி டயால் ஆகிய பாடகர்கள் தங்களுடைய இனிமையான குரல்களில் ரசிகர்களை இசைவெள்ளத்தில் மூழ்கடிக்க உள்ளார்கள்.
புதுமையான பாணி இசையால் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான், பல ஆண்டு கால மாகத் தன்னுடைய பாடல்களால் உலகெங்கும் உள்ள இந்தியர் களோடு மற்றவர்களையும் ஈர்த்துக் கொண்டிருப்பவர். உலகின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இவரின் இசையைக் கேட்பதற்கான இந்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்ள பலரும் முயன்று வருகிறார்கள்.
நுழைவுச்சீட்டு விற்பனை செப்டம்பர் 19ஆம் தேதியே தொடங்கிவிட்டது. பொதுமக்கள் நுழைவுச்சீட்டுகளை தங்களின் விருப்பத்திற்கேற்ப, ஐந்து பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, வாங்கிக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் உள்ளவர்கள் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள டிஎம்ஒய் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் நுழைவுச்சீட்டு விற்பனைப் பிரிவில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். மலேசியாவில் தங்குவதற்கான விடுதிக்கான பதிவுகளும் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்படும்.
டிஎம்ஒய் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் வானொலியுடன் ஒன்றிணைந்து பொதுமக்களுக்குப் போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெறுவோர், நிகழ்ச்சியின் விற்பனைப் பொருள்களை பரிசாகப் பெறலாம்.
போக்குவரத்து, உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்க விரும்புவோர், டிஎம்ஒய் ஜூவல்லர்ஸை நேரடியாகத் தொடர்புக்கொள்ளலாம். ஆதரவாளர்களுக்குத் தகுந்த விளம்பரமும் இலவச நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளும் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.