போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் வெளிநாட்டவர் ஐவர் கம்போடியாவில் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 22) பிடிபட்டனர்.
மொத்தம் 1.51 டன் எடையுள்ள போதைப்பொருள்கள் சிக்கியதாக கம்போடிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமை (ஜனவரி 24) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.
லாவோசிலிருந்து அவை கம்போடியாவிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவை தைவானில் விநியோகிக்கப்பட இருந்ததாகவும் கூறப்பட்டது.
திங்கட்கிழமை அதிகாலை 3.15 மணியளவில், மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது அந்த ஐந்து ஆடவர்களும் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் மூவர் சீனர், இருவர் தைவானியர்.
அவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகள், ஒரு கார், ஒரு மோட்டார்சைக்கிள், எட்டுக் கைப்பேசிகள் ஆகியவற்றையும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைப்பற்றியது.