கோத்தா பாரு: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை ( டிசம்பர் 28ஆம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டார்.
திரு அன்வார் விமானம்மூலம் வியாழக்கிழமை மதியம் 12.08 மணிக்கு பெங்கலன் சேப்பாவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.
அந்நாட்டு இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது, கிளந்தான் மாநிலத்தின் முதலமைச்சர் முகமது நசுருதீன் தாவூத் ஆகியோர் அன்வாரை விமான நிலையத்தில் சந்தித்து பேசினர். அவர்களுடன் அந்நாட்டு தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் தலைமை இயக்குநர் கைருல் ஷஹரில் இட்ரீஸ் இருந்தார்.
வெள்ளத்தால் சேதமடைந்த லுபோக் ஜாங் பாலம் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களையும் சந்தித்தார்.
கம்போங் பாங்கோல் மனோக்கில் இருக்கும் முகாமைப் பார்வையிட்ட பின்னர் திரு அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் ரிங்கிட்டை நிவாரணத் தொகையாக அவர் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக 1,000 ரிங்கட் வழங்கப்படும் எனவும் கூடுதல் நிவாரணம் தேவைப்படும் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் அந்நாட்டு தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின்மூலம் செய்துதரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.