சோல்: தென்கொரியாவில் உள்ள தனது வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பும் வானொலி நிலையம் ஒன்றின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்தியுள்ளது.
யோன்ஹாப் செய்தி நிறுவனம் அத்தகவலைத் தெரிவித்தது.
வடகொரியா அண்மைய வாரங்களாக சோல் மீதான நெருக்குதலை அதிகரித்துவருகிறது. தென்கொரியாவுடன் என்றுமே ஒன்றிணையாது என்று வடகொரியா கூறியுள்ளது.
அதோடு, அமெரிக்காவிலும் பசிஃபிக்கில் உள்ள அதன் நட்பு நாடுகளிலும் அணுவாயுதத் தாக்குதலை நடத்துவதற்கான தனது ஆற்றலை வலுப்படுத்த வடகொரியா உறுதிதெரிவித்துள்ளது.
‘ரேடியோ பியோங்யாங்’ எனும் அந்த வானொலி நிலையம் கடந்தகாலத்தில் தென்கொரியாவில் உள்ள பியோங்யாங்கின் வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வானொலி நிலையத்தின் இணையத்தளமும் ஜனவரி 13ஆம் தேதி செயல்படவில்லை.
அதே நாள் முற்பகுதியில், தென்கொரியாவுடனான பொதுமக்கள் பரிமாற்றங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைப்புகளைக் கலைப்பதற்கான திட்டங்களையும் வடகொரியா அறிவித்தது.