கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிற்கு, பத்தாண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று 681 மில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டதாக ‘பேங்க் நெகாரா மலேசியா’ வங்கியின் பகுப்பாய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
நீதிமன்றத்தில் 1எம்டிபி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றபோது அவர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
‘தனோர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனம் 1எம்டிபியிடமிருந்து நிதி பெற்றதாக ஆடாம் ஆரிஃப் ரொஸ்லான் கூறினார்.
‘துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்’ திட்டத்திற்காக முறி வழங்கப்பட்டதன் மூலம் 2013ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி 1எம்டிபிக்கு 2.72 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததாக அவர் சொன்னார்.
இருப்பினும் சில நாள்களுக்குப் பிறகு மொத்தம் 1.06 பில்லியன் அமெரிக்க டாலர் இரண்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாகத் திரு அடாம் கூறினார்.
டெவன்ஷேர் ஃபண்ட்ஸ் லிமிடெட் (US$646.5 மில்லியன்), எண்டர்பிரைஸ் இமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட் (US$414.1 மில்லியன்) ஆகியவை அவை.
அதே ஆண்டு மார்ச் 21ஆம் தேதி, டெவன்ஷேர் 640 மில்லியன் அமெரிக்க டாலரை தனோர் நிறுவனத்துக்கும் கிராண்டன் புரோபர்ட்டி ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கும் வழங்கியது.
அவ்விரு நிறுவனங்களும் டான் கிம் லூங் என்பவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசாங்கத் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது.
2013ஆம் ஆண்டு மார்ச் 22க்கும் ஏப்ரல் 10க்கும் இடைப்பட்ட காலத்தில் திரு நஜிப் தனோர் நிறுவனத்திடமிருந்து 681 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகப் பெற்றதாகத் திரு அடாம் தெரிவித்தார்.
திரு நஜிப் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது உள்ளிட்ட 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
வழக்கு விசாரணை தொடர்கிறது.