பெர்லின்: ஜெர்மனியின் பெரிய விமான நிலையங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தங்கள் பணியில் ஈடுபட மறுத்தனர்.
விமானங்கள் எதுவும் கிளம்பாதவாறு 24 மணி நேர வேலை நிறுத்தத்தைக் கோரியது தொழிலாளர் சங்கம் ‘வெர்டி’.
இந்த வேலை நிறுத்தத்தால் 1,100 விமானப் பயணங்கள் ரத்தாகும் என்றும் ஏறத்தாழ 200,000 பயணிகள் பாதிக்கப்படுவர் என்றும் ஜனவரி 31ஆம் தேதியன்று ஜெர்மானிய விமான நிலையங்கள் சங்கம் (ஏடிவி) மதிப்பிட்டது.
“ஜெர்மனியில் தினமும் வேலைநிறுத்த அறிவிப்புகளைக் காண முடிகிறது. இதனால் பயணத்திற்கும் பொருளியலுக்கும் பெரும் பாதிப்பு. இந்தப் போக்கை நிறுத்த வேண்டும்,” என்று ஏடிவியின் பொது நிர்வாகி திரு ரால்ஃப் பேய்சல் கூறினார்.
இருப்பினும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கும் ஒரு விலை உண்டு என்று பதிலளித்தார் வெர்டி சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தும் திரு உல்ஃப்கேங் பாய்ப்பர்.
சம்பளத்தை ஒரு மணி நேரத்துக்கு 2.80 யூரோ (S$4.05) உயர்த்தவும் 12 மாதங்களுக்கு மேலும் தாராளமான மிகைநேரச் சம்பளம் தரவும் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள 25,000 ஊழியர்கள் சார்பாக தொழிற்சங்கம் அதன் கோரிக்கையை முன்வைத்துள்ளது.