ஹாங்காங்: சீனாவின் மூப்படைந்துவரும் மக்கள்தொகையால் அடுத்த பத்தாண்டுக்கு பெய்ஜிங்கிற்கான முக்கியக் கொள்கைகள் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றன.
சீனாவில் உள்நாட்டுப் பயனீட்டை அதிகரிக்கவும், கடன்களைக் கட்டுப்படுத்தவும் அந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மூப்படைந்துவரும் மக்கள்தொகையால் அந்நாட்டுப் பொருளியலின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும்.
சென்ற ஆண்டு இதுவரை இல்லாத அளவில் குறைவான பிறப்பு விகிதம் பதிவானது. அதோடு கொவிட்-19 கிருமிப்பரவல் ஏற்படுத்திய மரணங்களால் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக மக்கள்தொகை குறைந்தது.
“சீனாவின் வயதுக் கட்டமைப்பு பொருளியல் வளர்ச்சியை மெதுவடையச்செய்யும்,” என்று மெல்பர்னில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழக கொள்கை ஆய்வு நிலையத்தின் மூத்த ஆய்வாளர் சியூஜியென் பெங் கூறினார்.
அடுத்த பத்தாண்டில் தற்போது 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஏறக்குறைய 300 மில்லியன் பேர், ஓய்வூதிய நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் ஊழியரணியை விட்டு விலகிவிடுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியத்திற்கான நிதி தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.