பெய்ஜிங்: பிஞ்சுக் குழந்தைகளை, 15வது மாடியிலிருந்து சன்னல்வழியாகக் கீழே வீசிய தம்பதியருக்கு ஜனவரி 31ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நாட்டை அதிர்ச்சியில் உறையவைத்த சம்பவத்தில் 2 வயது பெண் குழந்தையையும் 1 வயது ஆண் குழந்தையையும் மரணம் விளைவிக்கும் வகையில் ஸாங் போ, யே செங்சென் இருவரும் சீனாவின் சோங்சிங் பகுதியிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றிலிருந்து தூக்கி எறிந்தனர்.
இரு குழந்தைகளுக்கும் ஸாங்தான் தந்தை என்று கூறப்பட்டது. ஸாங்குக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை அறியாமல் யே அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
பின்னர், தங்களின் உறவுக்கு அந்தக் குழந்தைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடும் எனக் கூறி அவர்களைக் கொல்லுமாறு ஸாங்கை, யே தூண்டினார்.
குழந்தைகளின் அம்மா வீட்டில் இல்லாத சமயம், ஸாங் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தப் பிஞ்சுகளைச் சன்னல்வழியாகக் கீழே வீசினார்.
இரு குழந்தைகளின் மரணம் தற்செயலாக நடந்த ஒரு விபத்து என்று தம்பதியர் நாடகமாடினர்.
இருப்பினும், அவர்களின் சதித்திட்டத்தைக் கண்டறிந்த நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் நிறைவேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அனைத்துலக அளவில் ஆக அதிகமானோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாடு சீனா என்று மனித உரிமைக் குழு ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கணித்துள்ளது.