பெர்த்: இறந்துபோன கணவனின் விந்தணுவைப் பெற பெண்ணுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சட்டபூர்வ உரிமை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
அந்த 62 வயதுப் பெண்ணின் கணவர் 2023 டிசம்பர் 17ஆம் தேதி இறந்துவிட்டார்.
இந்நிலையில், அவரது உடலிலிருந்து விந்தை எடுக்க அப்பெண்ணுக்கு மேற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அந்த 61 வயது ஆடவரின் உடலும் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட விந்தும் பெர்த் நகரிலுள்ள ஒரு பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இறந்தவரின் உடலிலிருந்து விந்தை எடுத்து, அதன்மூலம் கருவுறுவது மேற்கு ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தகைய நடைமுறை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படும் இடத்தில், இறந்துபோன தன் கணவரின் விந்தணுவைப் பயன்படுத்திக்கொள்ள இனப்பெருக்கத் தொழில்நுட்ப மன்றத்திடம் அப்பெண் ஒப்புதல் பெறவேண்டும்.
அவ்விணையருக்கு ஏற்கெனவே இரண்டு பிள்ளைகள் இருந்தபோதும் இருவருமே இப்போது உயிருடன் இல்லை.
கடந்த 2013ஆம் ஆண்டு மீன்பிடிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி அவர்களுடைய 29 வயது மகள் இறந்துவிட்டார். பின்னர் 2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் அவர்களுடைய 30 வயது மகன் மாண்டுபோனார்.
இருப்பினும், வயதாகிவிட்டதால் அப்பெண் இனி இயல்பாகவே கருவுறுவது சிரமந்தான். ஆயினும், ‘ஐவிஎஃப்’ எனும் செயற்கைக் கருவுறுதல் முறைப்படி குழந்தைபெற அவருடைய கணவரின் விந்து பொருத்தமானதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்பீன்சில் வசிக்கும், 20களில் இருக்கும் அவர்களுடைய உறவுப்பெண் ஒருவர் வாடகைத்தாயாக இருந்து, குழந்தை பெற்றுத் தர முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.