மலேசிய மாணவர் ஒருவர் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படும் விவகாரம் பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் மலேசிய காவல்துறை அது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
சிலாங்கூரின் ஷா ஆலாம் புல்வெளியில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. அதிலிருந்து இறங்கிய மாணவர் ஒருவர் பள்ளிக்குச் சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை பொறுப்பு அதிகாரியான முஹமட் இக்பால் இப்ராஹிம் உறுதி செய்துள்ளார்.
மலேசிய சிவில் போக்கு வரத்து ஆணையம் சம்பவத்தை விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
“ஏப்ரல் 17ஆம் தேதி காலை 8.00 மணியளவில் ஜாலான் குனுங் நுவாங் யு11/11டி அருகே உள்ள திறந்தவெளியில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கி 15 நிமிடங்கள் அங்கு இருந்தது,” என்று திரு முஹமட் இக்பால் தெரிவித்தார்.
ஷா ஆலாமின் காவல்துறை உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவும் பொது உத்தரவு பிரிவும் சம்பவம் குறித்து புகார் செய்துள்ளன. இதையடுத்து அரசாங்க அமைப்புகள் மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறைக்கு அனுப்பியுள்ள காணொளியில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மாணவர் பள்ளிக்குள் நுழைவதைக் காட்டுகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
ஆனால் எந்தப் பள்ளிக்கு மாணவர் சென்றார் என்பது குறித்து விவரமில்லை. காவல்துறை விசாரணை தொடர்கிறது.