வியட்னாமில் உள்ள சென்ட்ரல் ஹைலண்ட்ஸ் என்ற பகுதியில் செயல்படும் இரண்டு காவல்துறை தலைமையகங்களில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
டாக் லாக் என்ற மாகாணத்தில் இருக்கும் கு குயின் என்ற மாவட்டத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவங்களையொட்டி ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியது.
மேலும் பல சந்தேகப்பேர்வழிகளைக் கைது செய்ய புலன்விசாரணை நடந்து வருகிறது.
அந்த இரண்டு காவல்துறை தலைமையகங்களில் நேற்று அதிகாலை நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்தது.
காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர், பலரும் காயமடைந்தனர் என்று தெரிவித்த அந்த இணையத்தளம் புள்ளிவிவரங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்த சென்ட்ரல் ஹைலண்ட்ஸ் பகுதியில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.
அந்தப் பகுதி எப்போதுமே வியட்னாமிய அரசாங்கத்திற்கு மிகவும் பிரச்சினையான ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.
நில உரிமை உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பில் அந்தப் பகுதியில் பலமுறை சச்சரவுகள் மூண்டு இருக்கின்றன.
வியட்னாமைப் பொறுத்தவரை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இடம்பெறக்கூடிய வன்செயல்கள் மிகவும் அரிதானவை.
அந்த நாட்டில் பொதுமக்கள் யாரும் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமானதாகும். கள்ளச் சந்தையில் ஆயுதங்களை வாங்கு வதும் அவ்வளவு எளிதல்ல.
ஹோ சி மின் சிட்டியின் புறத்தே கடந்த 2020ல் நடந்த சட்டவிரோத சேவல் சண்டை போட்டியில் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2016ல் இரு மூத்த அதிகாரிகளைச் சக ஊழியர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் நிகழ்ந்தது.